Friday, July 15, 2016

நல்லோர் நடேச முதலியார் வாழ்க்கை வரலாறு திவான் பகதூர் டாக்டர் சி.நடேச முதலியார் (1875- 18.2.1937)

 நல்லோர் நடேச முதலியார் வாழ்க்கை வரலாறு
திவான் பகதூர் டாக்டர் சி.நடேச முதலியார்
 (1875- 18.2.1937)
1912 இல், பெரியவர் திராவிடத் தந்தை திவான் பகதூர் டாக்டர் சி. நடேச முதலியார் தோற்றுவித்த திராவிடர் சங்கத்தின் 100 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் தி.மு.க.வினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்சியாகப் பதவியில் மிகச் செல்வாக்கோடு இருந்த காலத்தில், 1949 இல், தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறுபதாவதாண்டு வைர விழா, 2009 இல் வந்தது.
1909 இல் பிறந்த அண்ணாவின் நூற்றாண்டு நிறைவும் அதே ஆண்டில் வந்தது. 1949 இல் தி.மு.கழகத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற, இன்றைய தி.மு.க தலைவர் காலத்திலேயே 2009 இல் தி.மு.க.வின் 60 ஆவது ஆண்டு வைர விழா வந்தும் வைர விழாவைப் பெருமையுடன் தி.மு.க. கொண்டாடத் தவறியது வியப்பினை அளித்தது. இன்றும் அளித்து வருகிறது.

கொண்டாடததற்கான காரணமும் தெரியவில்லை.

நமது இளந்தமிழன் இதழில் வைர விழாவைக் கொண்டாட வேண்டும் என்று 2007, 2008, 2009 இதழ்களில் எழுதியிருந்தோம்.

கடந்த காலங்களில் திராவிட சங்கத்தின் பொன் விழா, வைரவிழா, முத்து விழா ஆகிய விழாக்களையும், சர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் முதலிய தலைவர்களின் விழாக்களையும், நீதிக்கட்சியின் சிறப்பான ஆண்டு நிறைவுகளையும் இவர்கள் கொண்டாடினார்களா?

இருப்பினும், இப்பொழுது நல்லோர் நடேச முதலியார் அமைத்த திராவிடர் சங்கத்தின் நூற்றாண்டைக் கொண்டாடியது வரவேற்கத்தக்கது. நல்லோர் நடேச முதலியார் பற்றிய வாழ்கைக் குறிப்பை நமது வாசகர்களுக்கு அளிக்கின்றோம். - தி.வ.மெய்கண்டார்.

(நடேச முதலியார் பற்றிய இக்கட்டுரை திராவிடரியக்க வரலாற்றறிஞர் திரு. கே.குமாரசாமி எழுதிய திராவிடர் தலைவர் டாக்டர் நடேசனார் என்னும் நூலி லிருந்து எடுக்கப்பட்டது)

நல்லோர் நடேச முதலியார் வாழ்க்கை வரலாறு
திவான் பகதூர் டாக்டர் சி.நடேச முதலியார்
 (1875- 18.2.1937)

பொன்னேரியைச் சார்ந்த சின்னக்காவனம் என்னும் ஊர் இவருடைய மூதாதையர்கள் ஊராகும்.
இராவ் சாகிப் நல். முருகேச முதலியார்
(தமிழ்நாடு அரசு முன்னாள் செயலர், முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் ஆலோசகர் )

1984 இல் எழுதியது

சமீப காலத் தமிழக வரலாறு ஒருவாற்றாலும் சீராக எழுதப்படவில்லை. தென் னிந்தியாவுக்கே மொழி, சமுதாயம், பண்பாடு, அரசியல் முதலிய வளர்ச்சிக்குத் தமிழகம் தாயகமாக இருந்துள்ளது. சுமார் நூறாண்டுக்கால அளவில், தமிழ்நாட்டின் வரலாறு தேசிய சரிதத்துடன் பின்னிக் கிடக்கிறது. பல சாதனைகளும், சில இடர்பாடுகளும் கூடிய கால அளவை இது.
தமிழ் வாழ வேண்டுமெனில், மற்றையவர் தமிழ்நாட்டின் மேன்மையை அறிய வேண்டுமெனில், இளைய சமுதாயம் தெளிவான சரித்திர உண்மைகளை ஆய்ந்து பார்த்தல் இன்றியமையாதது. தமிழகம் வாழப் பாடுபட்ட பல பெரியோர்களின் வரலாறுகள் கூட மறைந்தும் மழுங்கியும் கிடக்கின்றது. இந்தக் குறைகள் தீர இப்போது நல்ல தருணமாகக் காணப்படுகிறது.

தமிழ்ப் பல்கலைக் கழகங்கள், உலகத் தமிழ்ச்சங்கம் முதலியன தோன்றும் இந்த நேரத்தில், நூல்கள் பல எழுதப்பட்டதால் நலமுடைந்து, கற்றவர்களும் மற்றவர்களும் முன்னோக்கிப் பார்த்தால் மட்டுமின்றி, நிகழ் காலத்தையும், சென்ற காலத்தையும் நோக்கி, வரலாற்றுக் காரண காரியங்களின் தொடர்பை அறிந்து கூறுவதும் கடனாகும். அவ்வக் காலங்களில் வாழ்ந்த சான்றோர்களின் வாழ்க்கையையும் கொள்கைகளையும் அறிந்து கொள்வது பயன்படும் பயிற்சியாகும்.

பிற்பட்டோர் கல்வி அபிவிருத்திக்கும், முதியோர் கல்விக்கும் திராவிடர் இல்லம் (Dravidan Home) என்ற மாணவர் விடுதியையும், சென்னை ஐக்கிய சங்கம் (Madras United League) என்கிற ஸ்தாபனத்தையும் டாக்டர் நடேசனார் சுயேச்சையாக, தன்னலமின்றி 1914 ஆம் ஆண்டில் துவக்கிப் பரிபாலித்து வந்தார். இவ்விரண்டும் பொது ஜன நலனுக்கு வித்தாக அமைந்தன.

கவி ரவீந்திரநாத தாகூர் சாந்தி நிகேதனில் பல நாட்டுப் பண்பாளர்களையும் சேர்த்து ஒரு கல்விப் பண்ணையை ஏற்படுத்தியது போல், திராவிட இல்லம் பயன்பட்டது.

தென்னிந்திய மாணவர்கள் பலர் அங்குத் தங்கித் தங்கள் படிப்புகளைக் கவனித்துப் கொள்ளவும், பண்பாடு, ஒழுக்கம், நேர்மை இவைகளை நல்ல சூழ்நிலையில் வளரச் செய்யவும் இது பயன்பட்டது.

இந்த இல்லத்தில் பல்வேறு வருணத்தவரும் கூடிப் பழகினார்கள். பிரதி வாரமும் இளைஞர்கட்கு கல்விமான்களைக் கொண்டு அறவுரையும், அறவுரையும் நல்க நடேசனார் ஏற்பாடு செய்தார். இதனால், குலபதி சர். ஆர். வெங்கடரத்தினம் போன்றவர்களின் தொடர்பு இளைஞர்கட்குக் கிடைத்தது.
டாக்டர் நடேசனாரின் தனிப்பட்ட இந்த முயற்சியைப் பாராட்டியவர்கள் பலர்.
இந்த இல்லம், அறிவாளிகள் மிகுந்த சென்னைத் திருவல்லிக்கேணியில், டாக்டர் நடேசனாரின் வீட்டின் அருகாமையிலேயே நடத்தப் பெற்றது. சமுதாயத்தில் பெரும்பாலோர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகத் தங்கியதைத் தீர்க்கும் நோக்கம் ஒன்றன்றி வேறு நோக்கம் இதற்கு இல்லை என்பதை யாவரும் உணர்ந்தார்கள். வித்திட்டவரின் சான்றான்மையைப் போற்றினார்கள்.

நடேசனார் நல்ல வேளாளர் பழங்குடியில் பிறந்து வளர்ந்து, பி.ஏ. படிப்புப் பூர்த்தியானவுடன், மேற்கூறிய மகரி´ போல் வெள்ளை உடை தரித்த ஆர். வெங்கட்ரத்தினம் நாயுடு தலைமையில் நடந்த வந்த பித்தாபுரம் மாகராஜா கல்லூரியில், உடல்கூறு(Physiology) விரிவுரையாளராகச் சிறிது காலம் பணியாற்றினார். பின் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, மருத்துவப் பட்டம் பெற்றுப் பணி புரிந்தார். பொதுப் பணிகளிலும் ஈடுபட்டார்.
திராவிட இல்லம் வளர்ச்சியில் சர் பிட்டி தியாகராயச் செட்டியார், பனகல் அரசர் போன்ற மேன்மக்களும் ஈடுபட்டார்கள். முதலாண்டுப் பூர்த்தி விழாவுக்குச் சென்னை கவர்னரே விஜயம் செய்தார்.

டாக்டர் நடேசனாரை ஊக்குவித்தவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். தமிழ் எழுத்து ஆராய்ச்சி வல்லுநர் (இன்ஜினியர்) பி.வி.மாணிக்க நாயக்கர், தத்துவ மேதையும் சீர்திருத்தவாதியுமான டி.கோபாலச் செட்டியார், என்.வி. நடராஜன், வழக்கறிஞர்கள் எதிராஜ் முதலியார், சிவப்பிரகாச முதலியார், மதன கோபால நாயுடு முதலியவர்களே ஆவர்.

இந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்களில் பலர் நீதிபதிகளாகவும், கவர்னர் சபை மெம்மபர்களாகவும் கூடப் பிற்காலத்தில் ஆனார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற எல்லாப் பகுதிகளையும் குறிக்கும் ஒரே பண்பாட்டுச் சொல் திராவிடம் என்பது. பழைய நூல்களும் தென்னாட்டைத் திராவிடம் என்றே வழங்கியது. சிலர், நாம் திராவிடர் இல்லையயன்றால் இவ்வுண்மை பழுது படாது. இந்த இல்லத்தில் படித்தவர்கள் யாவரும் நல்ல யோக்கியதையும் புகழும் பெற்று விளங்கினார்கள்.

நடேசனார், தமது மருத்துவத் தொழிலில் ஜாதி மத வித்தியாசமின்றி, எல்லோருக்கும் சேவை செய்து வந்தார். பலரும் மருந்துக்கும் சர்டிபிகேட்டுகட்கும் பணம் கேட்கப்படாமலே பெற்றுச் செல்வார்கள். ஆதாயத்திற்கோ, அரசியல் ஆதரவிற்கோ நடேசனார் அவ்வாறு செய்யவில்லை.

டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சர் ஆப்பிரிகாவில் அந்நியர் ஆதிக்கத்தால் படிப்பிலும் சுகாதாரத்திலும் பிற்போக்கடைந்து கிடந்த அந்நாட்டு ஜனங்களுக்கு மருத்துவப் பணி பல்லாண்டுக்காலம் புரிந்தார். அதுபோலவே, தயை என்பதே பரம தர்மம் என்று பின்பற்றி, நடேசனார் உழைத்துத் தம் சொத்துக்களையும் நாளடைவில் இழந்தார்.

சொந்த சேவை மட்டுமின்றி, சென்னை மாநகர சபையில் அங்கத்தினராகி, முக்கியமாகச் சுகாதாரம், கல்வி, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் இவைகட்கு இடைவிடாது உழைத்தார்.

அக்காலத்தில் பெரும்பாலோர் கல்லூரிகளிலும், உத்தியோகங்களிலும், சட்டமன்றத்திலும் ஜனத்தொகைக்கேற்ற இடம் பெறாது, மிகத் தாழ்ந்த நிலையில் இருந்தனர். செல்வாக்கும் சிறப்புமின்றிப் பாதிக்கப்பட்டார்கள். ஒரு சமூகத்தினர் மட்டும் கல்வி முன்னேற்றத்தாலும் குடும்ப ஆதரவினாலும் பல முக்கிய ஸ்தானங்களில் இருந்து வந்தார்கள். பிற்பட்டவர்கள் தலையயடுக்க விரும்பி காலத்தில், முன்னேறிவிட்டவர்கள் இடம் தருவதற்கு முன் வரவில்லை. தகுதி மேன்மையடைந்தவர்கள் மேல் கொண்ட துவே­த்தால், அவர்கள் முன்னேறிய வர்களை வெறுக்கிறார்கள் என்றார்கள். இது உண்மையல்ல.

சுமார் 1896 ஆம் ஆண்டில் ரெவின்யூ போர்டார் எல்லாச் சமூகத்தாரும் அரசாங்க உத்தியோகங்களில் ஏறக்குறைய நியாயமான பங்கு கொடுக்க வேண்டும் என்று ஏற்படுத்திய உத்தரவை, மேலதிகாரிகள் ‘தகுதி’ என்ற பேரால் அமுல் செய்யவில்லை.

ஜனத்தொகைக் கணக்குகளிலும் இந்த உண்மை விளங்கியது.
முதல் முதலாக, குத்துப் புள்ளிகளுடன் சர். அலெக்சாண்டர் கார்டியு என்ற கவர்கனர் சபை மெம்பர், பிரிட்டிஷ் அரசாங்கம் அமைத்த பப்ளிக் சர்விஸ் கமி­னுக்குச் சமர்பித்த சாட்சியத்தில் இதை வெளியிட்டார். கல்வி உத்தியோகம் மட்டுமின்றி, கவர்னர் சபையிலும் மிண்டோ மார்லி சீர்திருத்தம் வந்த பிறகும், ஒரு சார்பாரே ஏறக்குறைய எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்று காணப்பட்டது.

இது முன்னேறியவர் குற்றமில்லாமல் இருக்கலாம். ஆனால் சம நீதிக்கும் பிற்பட்டோர் முன்னடி எடுத்து வைக்கவும் வில்லங்கமாகவே இருந்தது என்பதைப் பலர் உணரவில்லை.

ஆங்கில அதிகாரிகளிலும்கூடச் சிலர், பிற்பட்டவர்களை அதிகமாக உத்தியோகத்தில் சேர்த்தால் நிர்வாகத் தரம் குறைந்து விடுமென்ற கருத்துக் கொண்டிருந்தனர்.

பல்வேறு துறைகளில் ஐரோப்பியர் பெரும்பான்மையைக் குறைத்து இந்திய மயம் (ணூஐdஷ்ழிஐஷ்விழிமிஷ்லிஐ) ஆக்க வேண்டுமென்ற வேண்டுகோளுக்கும் இம்மாதிரி எதிர்ப்பு இருந்தது அறிந்ததே. பிற்பட்டோர்களில் சிலர் வெகு உயர்ந்த தகுதிகளில் இருந்தாலும், மேல்தரக் கல்விச் சாலைகளிலும் அலுவலகங்களிலும் ஏகபோகம் அனுபவித்து வநதவர்கள். இவர்கட்கு இடம் கொடுப்பதற்குத் தயங்கினர்.
கல்வி, உத்தியோகம், சட்டமன்றத்தில் இடம் இவைகளில் வகுப்புவாரி நீதி நல்க வேண்டுமென்று முதல் முதலாகக் குரல் எழுப்பி, ஆக்க வேலைகளில் தலைப்பட்டவர் டாக்டர் நடேசனார் என்பது வரலாற்று உண்மை.
இந்த நீதியை வைசிராய் சபை முதலிய பெரிய இடங்களில் கேட்பதைவிட, கல்வி முதலிய ஆதாரத் துறைகளில் பெற்ற முன்னேற்றம் அடைதலே உறுதியளிக்க வல்லது என்பதையும் நடேசனார் அறிந்தார்.
பின்னர் அன்னிபெசண்டு அம்மையார் ஆரம்பித்த சுய ஆட்சி (க்ஷிலிதுe யூற்யிe)  கிளர்ச்சியில், கல்வியிலும், பதவியிலும் ஆதரவிலும் ஏற்கனவே முன்னேற்றம் அடைந்தவர்கள் துரிதமாக ஈடுபடத் தலைப்பட்டார்கள்.
இதனால் பின் அடைந்தவர்கள் பிற்போக்கிலேயே இருந்து அவதிப்படுவார்கள் என்ற அச்சம் பல தேசியவாதிகளிடமும் உண்டாயிற்று.
இதன் விளைவாகத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்ற ஒரு அமைப்பு உண்டாயிற்று. இது 1916 ஆம் ஆண்டில் சர்.பிட்டி. தியாகராயச் செட்டியார் விடுத்த அறிக்கையில்  (Manifesto) விளக்கப்பட்டது.
அப்போது மகாத்மா காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் (1921) இல்லை.
பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த சில சீர்திருத்தங்களின் கீழ் (1918 சட்டம்) முதல் முதல் 1920 இல் சட்டசபைத் தேர்தல்கள் நடந்தன. இதில் நீதிக்கட்சி என்று பிறரால் கொடுக்கப்பட்ட பெயரால் தேர்தலில் வெற்றிப் பெற்று அக்கட்சி மந்திரிசபையும் அமைத்தது. நடேசனார் அந்தத் தேர்தலில் அமோகமான வெற்றிப் பெற்றார். பதவி வேட்கையற்றவராகையாலே, அமைச்சரவையின் அவர் இடம் நாடவில்லை.
கட்சியும் அவரது தியாகத்தை உணரவில்லை.
முதல் தேர்தலில் நடேசனார் எல்லாரையும் விட அதிக வாக்குகள் பெற்றது கட்சியினரையும் தலைவர்களையும் பிரமிக்கச் செய்தது. எல்லா ஜாதியினரும் நடேசனாருக்கு பெருத்த ஆதரவு தந்தனர். ஒரு இனத்தார் வெறுப்பையும் சிறிதளவும் சம்பாதித்துக் கொள்ளாத சமரச மக்கள் பிரதிநிதியாக அவர் விளங்கினார்.
எனவே, அவரது வகுப்புவாதத்தை யாரும் எதிர்க்கவில்லை. அவரது வாதங்களை யாவரும் மதித்தனர்.
கல்வி நிலையங்களிலும், பொது அலுவலகங்களிலும் தகுதி பெற்ற திராவிடர்கட்கு நியாயமான இடங்களை ஒதுக்க வேண்டுமென்று நடேசனார் வற்புறுத்தினார்.
அந்நிய அரசாங்கம் தந்த சிற்சில சலுகைகளைக் கூட அதிகார வர்க்கத்தினர் பின் தங்கியவர்கட்குக் கொடுக்காததைக் கண்டித்தார்.
அதற்குப் புள்ளி விவரங்கள் தந்தார்.
இலாகா ஊழியர்கள தேர்தெடுக்கும் வாரியத்தை நீக்கி, அரசாங்கத்திற்கு உட்படாத பப்ளிக் சர்வீசு கமி­னை நியமிக்க வேண்டுமென்று, சட்டமன்றத்தில் பல சமயங்களில் வாதாடினார்.
ஆதி திராவிடர்கள் நலத்திற்கு நடேசனாரைவிடத் தீவிரமாகப் பாடுபட்டவர்கள் வேறு எவரும் இல்லை. மகாத்மா காந்தியடிகள் அரிஜன நலத்துக்கு இயக்கம் தோற்றுவித்ததற்கு முன்பே நடேசனார் அந்த இனத்தவர்பால் அக்கரை காட்டினார்.
1918 இல் எழும்பூர் ஸ்பர்டாங்க் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஆதி திராவிடர்களின் உரிமை, தீண்டாமை ஒழித்தல், ஆலயப் பிரவேசம் முதலிய உரிமைகட்கு தீவிரமாகப் பேசினார்.
திவான்பகதூர் ஆர். சீனிவாசன், திரு.எம்.சி. இராஜா போன்ற ஆதிதிராவிடத் தலைவர்கள் நடேசனாரைத் தம் இனக் காப்பாளராகக் கருதினார்கள். அவர் மருத்துவக் கூடத்திலும், அரிஜன இளைஞர்களுக்கு வேலை தந்தும், வேறு உத்தியோகங்கட்கு சிபார்சு செய்தும் ஆதரித்து வந்தார். சுவாமி சஹஜானந்தா என்று பின்னாளில் அழைக்கப்பெற்ற ஆதி திராவிடப் பெரியார் நடேசனாரிடம் பற்றும் தோழமையும் கொண்டிருந்தார்.
ஒரு சமயம் சிலர் நடேசனாரை ஏசிய போது, தானும் அவர் கட்சியும் ஸ்ரீஇராமானுஜர் ஆயிரம் ஆண்டுகட்கு முன் செய்ய முயன்றதையே செய்ய முன்வந்துள்ளதாக அவர் வீறு பேசினார்.
சாதி வேறுபாடற்ற ஆன்மீக நேய ஒருமைப்பாடுள்ள சமுதாயத்தைக் காண்பதுவே மகத்தான சேவையாகத் தாம் கொண்டார்.
வகுப்பு வாதத்தால் இந்திய சுதந்திரம் தடைப்படும் என்று ஓலமிட்டவர்களை நோக்கி, மகாத்மா காந்தி ஒரு கோடி ரூபாய் சேர்த்து ஓராண்டில் சுயராஜ்யம் வாங்கித் தர முயன்றார். ஆனால், நான் நாளைக்கே சுதந்தரம் வர விரும்புவேன் என்றும், ஆனால், அந்தச் சுதந்திரத்தில் யாவருக்கும் சமதர்மம் இருக்க வேண்டுமென்றும் கூறினார்.
புது அரசியலில் வாக்குரிமை, சொத்து, படிப்பு, வரி செலுத்தும் தகுதி யுள்ளவர்கட்கே கொடுக்க வேண்டுமென்று கூறியவர்கட்கு, ஏழைக் குடிகள் வரி செலுத்தாமலிருக்கலாம். ஆனால், அவர்களது வியர்வை உழைப்பால் மற்றவர்கட்குச் செல்வத்தை உண்டு பண்ணுகிறார்கள் என்றும், அவர்கள் வரி செலுத்துதல் ஏழைகள் உழைப்பால் என்றும் எடுத்துக் காட்டி, ‘வாக்குரிமை யாவர்க்கும் முன்னேற்ற நாட்டில் பிறப்புரிமையாக இருக்க வேண்டு’மென்று நாடேசனார் வாதாடினார்.
நடேசனார் சட்டமன்றத்தில் நிகழ்த்திய பேச்சுக்கள் அனுபவச் சான்றுடையதாகவும், ஆர்வமுடையதாகவும் இருந்தன. அவர் வரவு செலவு திட்ட வாதங்கள் மிக்க ஆழ்ந்த அறிவும் நுட்பமும் கூடியதாகக் காணப்படும்.
அவர் ஈடுபடாத துறையே கிடையாது. முக்கியமாக கல்வி, பொதுநலம், நீர்ப்பாசனம், நிர்வாகம் இவைகளில் முக்கிய பங்கு எடுத்துக் கொண்டார். நீர்ப்பாசன விவாதங்களில் அவரது உரைகளை, அந்நாள் மெம்பர் சர் கே.சீனிவாசய்யங்கார் மிகவும் மெச்சியுள்ளார். சுகாதார வி­யங்களில் அவர் சிறந்த கருத்துக்களைக் கூறுவார். கட்டாய ஆரம்பக் கல்வியில் மிகவும் பரிவு காட்டினார். கூட்டுறவு வி­யங்களில் மக்கள் நலத்துக்கு வாதாடினார்.
சென்னையில் பல இடங்களில் ஏழைகள் மேல்கோப்பு கட்டி, வீடு கட்டிப் பலவாண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். சில சமயங்களில் திடீரென்று நிலச் சொந்தக்காரர்கள் அவர்களை வெளியேற்ற முயல்வார்கள். ஏழைகள் உரிமை இழக்காமலிருப்பதற்கு, சென்னை குடித்தனக்காரர் பாதுகாப்புச் சட்டத்தை (ளீஷ்மிதீ வீeஐழிஐமிவி Prலிமிeஉமிஷ்லிஐ யஷ்யியி) ஆதரித்து வெற்றிகரமாக நிறைவேற்றினார். அவர் பேச்சுக்கள் வீண்வாதம் இன்றி, பொருள் செறிவுடையதாய்க் கம்பீரமான குரலில் நிகழ்த்தப்படும்.
சட்டமன்றச் சேவையைவிட மேலும் கவனம் பெற்றது அவரது சென்னை மாநகராட்சி நிர்வாகம். பலவாண்டுகள் அவர் அங்கத்தினராக மட்டுமின்றி, நகராட்சி மன்றத்தின் பொதுநலக் கமிட்டி (City Tenants Protection Bill)  தலைவராகவும் இருந்து பல சீர்திருத்தங்களைச் செய்தார். பிரதி காலையிலும் அவர் தமது டிவி­னில் சில இடங்களையாவது பார்த்துவிட்டுப் பின் தான் தம் மருத்துவ வேலையைத் துவக்குவார்.

பல மருத்துவ மாநாடுகளில் அவர் பங்கு கொண்டார். கிழக்கு ஆசியா மருத்துவ சம்மேளனம் கல்கத்தாவில் நடந்தது. அதில் நடேசனார் கூறிய யோசனைகள் பலராலும் பாராட்டப் பெற்றன. மருத்துவத் தொழிலில் இருந்தாலும், பல திறப்பட்ட வி­யங்கள் அவருக்குத் தெரியும்.
அவரது நூல் சேமிப்பை சென்னை மாநாகராட்சிக்கு பரிசாகக் கொடுத்தார். அவை  ரிப்பன் மாளிகையில் பல நாள் இருந்தன.
அவர் அரசியலில் மட்டும் ஈடுபட்டவர் எனலாகாது. அவர் ஒரு மன்பதை அன்பராகவே (Humanist) எப்போதும் விளங்கினார்.

பலர், அவர் தொழிலாளர் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் ஈடுபட்டு, ஆர்வமுடைய பங்கும் எடுத்தவர் என்பதை அறியார்.
திரு.வி.க. தமது ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ என்ற நூலில், நடேசனாரின் சேவையைப் பாராட்டி பலவிடங்களில் வியந்துள்ளார்.
இந்தியாவிலேயே சென்னையில்தான் முதல் தொழில் சங்கம் ஏற்பட்டது. அதனை ஆரம்பிக்கும் போதுஅவர் திரு.வி.க.வுக்குத் துணைப் புரிந்தார். அதைவிட மகத்தான சேவை, அவர் பக்கிங்காம் கர்நாடிக் நூற்பாலை மூடப்பட்ட போது, தம் உயிர் ஆபத்தையும் பாராட்டாது கலகம் நடந்த இடங்களுக்கு நேரில் போய்ச் சமாதானம் செய்து வந்ததாகும்.
சூளை ஆலை மூடப்பட்டபோது, புளியந்தோப்பில் நடந்த கலவரத்தில் போலீசு சுட்டுச் சிலர் உயிரிழந்தார்கள்.

அப்போதும் அவர் கருங்காலிகள் என்று துவே´க்கப்பட்ட ஆதி திராவிடர்களுக்கு அனுசரணையாக இருந்து, மற்றவர்களை வேலைக்குப் போகும்படி செய்து சமாதானம் செய்த வைத்தார். திரு.வி.சக்கரைச் செட்டியார் போன்ற தொழிலாளர் தலைவர்கள், டாக்டரிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தார்கள்.

நடேசனார், அரசியலில் நண்பர்களாயினும் சரி, தன்னை உதாசீனம் செய்தவர்களாயினும் சரி, அவர்களிடம் நட்பும் விசுவாசமும் உண்மையும் கூடிய உறவுடையவர். கொள்கையில் தீவிரவாதியாக இருந்தாலும், நண்பர்களுக்கு விட்டுக் கொடுக்கும் சுபாவமுடையவர்.

அவர் சென்னை மாநகராட்சி மன்றத்தில் மூன்று முறை தலைவர் பதவிக்கு ஆபேட்சித்தார். மூன்று முறையும் நண்பர்கட்கு விட்டுக் கொடுத்தார். உதவித் தலைவர் ஸ்தானத்தைத்தான் கட்சியாளர்கள் அவருக்கு விடுத்தார்கள். அதுபோல அவர் மந்திரி பதவிக்கும் ஆசைப்படவில்லை.
ஒரு தேர்தலில், தாம் சுயேச்சையாக நின்று அமோக வெற்றிப் பெற்றார். ஆனால், சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கையைக் காற்றில் விட மாட்டேன் என்று அப்போது கூறினார். சட்டசபையில் அவரை அந்திய காலத்தில் உப தலைவராக கண்துடைப்பாக கட்சியினர் அமைத்தனர்.
1929 ஆம் ஆண்டு தேர்தலில் கட்சி சிறுபான்மை அடைந்தது. அது காரணமாக பனகல் அரசர் மந்திரி சபை கூட்ட விரும்பவில்லை. டாக்டர் சுப்பராயன் முதன்மையில் சுயேச்சை மந்திரிசபை இயங்கியது.

1929 இல் டாக்டர் நடேசனார், மந்திரி சபையில் பிராமணர்கட்கு ஓரிடம்கூடத் தராததால் அவ்வினத்தாரின் முழு வெறுப்பையும் எதிர்ப்பையும் கட்சி பெறுகிறது என்று கூறி, அமைச்சரவையில் பிராமணர்க்கு ஒரு இடம் தரவேண்டுமென்று யோசனை கூறினார். அதன் விளைவாக ஒரு பிராமணர் (சேதுரத்னம் ஐயர்) அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

நடேசனார் சமரசமும் உதாரகுணமும் உடையவர் என்பதை உலகம் அறியும். அவரது தியாகத்தைக் கண்டு, யாவரும் வியந்தனர்.
தமது இறுதி நாளில், தமது ஒரே மகனையும் அவர் இழந்தார். தந்தை போல் நல்ல குணம் படைத்த சரவணன் என்ற மகனார், பி.ஏ. ஆனர்சு படிப்புப் படித்திருந்தார். சுரம் கண்டு அகால மரணமடைந்தார். நடேசனார் அதனால் மனமுடைந்து, உடல் மெலிந்து துக்கமடைந்தார். எனினும், பொதுக் காரியங்களில், இவர் ஜன உபகாரியாகவே உழைத்தார்.

கடைசி 1937 ஆம் தேர்தலில் மனச்சோர்வுடன், அன்பர்கள் வேண்டுகோட் கிணங்க வேட்பாளராக நின்றார். தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே (18.2.1937 அன்று) நடேசனார் உடல் நீத்தார்.

ஆதி காலத்தில் இளைஞர்நலக் காப்பாளராக இருந்தது போலவே ஆயுள் முழுவதும் அவர் உழைத்தார். கல்லூரிகட்கு மாணவர் தேர்தல் கமிட்டி அவர் வற்புறுத்தலால் நியமிக்கப்பட்டது. பல மாணவர்கட்கு நீதியும் வாய்ப்பும் கிடைத்தது.

வேறு துறைகளிலுள்ள மதன கோபால நாயுடு, திரு.ரங்கராமானுஜம், சண்டே அப்சர்வர், திரு.பி.பாலசுப்ரமணியம் போன்றவர்களைத் தம் பெற்ற பிள்ளைகள் போலவே பாவித்தார்.

சீர்திருத்தங்களை  மேடையில் பேசி வாழ்க்கையில் கைவிடப்பட்ட பதர்கள் போல் அல்லாமல், ஒவ்வொரு நேரமும் நன்மையே புரிந்த சான்றாளராக விளங்கினார். பலர்அவரை ஒரு அரசியல் தலைவராக மட்டும் கருதாது, அன்பு நெறி காட்டிய சமயத் தலைவர்களின் வரிசையிலேயும் வைத்துப் போற்றினர்.
தமிழ்ப்பண்பாட்டின் தலையான கோட்பாடாகிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இலக்கணத்துக்கு எடுத்துக் காட்டாகவே நடேசனார் விளங்கினார். எப்போதும் நல்ல உடை தரித்தலும், உணவில் மிதமும் தூய்மையும் புலாலுண்ணாமையும் கடைப்பிடித்தவர் இவர்.
நல்லவர்கட்குப் பெரிய சான்று அவர்கள் சடல ஊர்வலத்தைக் கண்டு மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதாகும். டாக்டர் நடேசனார் சடல ஊர்வலத்துக்கு ஒரு மைல் நீளம் மக்கள் திரண்டார்கள். கையயடுத்துக் கும்பிட்டார்கள். படுதாவிலிருக்கும் முஸ்லிம் பெண்கள்கூட நாடு போற்றிய நல்லவரின் சாந்தமான முகத்தை தரிசித்தும், பாதத்தைக் கும்பிட்டும் கண்ணீர் வடித்தனர்.
அவர் பூதவுடல் மறைந்தாலும், அவர் புகழுடல் இன்றும் கண்ணிலும் கருத்திலும் நிலவுகின்றது. அவர் தொண்டு மலர்தலை உலகில் நீடு புகழோடு நிலைத்து மன்னுக. (கவிதா மண்டலம், மார்ச் 2012)

5.3.1933 ‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் வெளிவந்தது! டாக்டர் டி.எம்.நாயர் (1866 - 17.7.1919)

5.3.1933 ‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் வெளிவந்தது!
டாக்டர் டி.எம்.நாயர் (1866 - 17.7.1919)
டாக்டர் டி. மாதவன் நாயர் 1966 ஆம் ஆண்டில் மலையாள தேசத்தில் பிறந்தார். இவருடைய தகப்பனார் ஒரு ஜில்லா முனிசீப்பாக வாழ்ந்து வந்தார். அவர் தமது குமாரருக்கு உசிதமான பிராயத்திலேயே வித்தியாப்பியாசமாகிய ஏணி மீதேறி கடைசியாகச் சென்னையில் ராஜதானிக் கல்லூரியில்(Presidency College) உயர்தரப் படிப்பிற்காக மாணாக்கராயினர். இவர் இக்கலாசாலையில் இண்டர் மீடியேட் பரீட்சையில் தேறி, எப்.ஏ. என விளங்கினார். இக்காலத்தில் இவருடன் படித்துப் பிறகு பிரகாசித்தவர் காலஞ்சென்ற திவான் பகதுர் சி. கருணாகர மேனன் என்பவர்.
 டாக்டர் நாயர் ஆரம்பத்திலிருந்தே வைத்தியப் பரீட்சைக்காகப் படிக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்ததால் சென்னை பிரசிடென்சி கலாசாலை யிலிருந்து அவர் பி.ஏ. பட்டம் பெற இஷ்டப்பட வில்லை. டி.எம்.நாயர் 1890 ஆம் வரு­த்தில் இங்கிலாந்து முதலிய அயல் தேசங்களில் வைத்திய சாஸ்திரம் படிப்பதற்காக, இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார். எடின்பரோ சர்வகலா சாலையில் சேர்ந்து இவர் சில காலம் படித்தார். 1894 இல் இவருக்கு அந்தச் சர்வகலா சாலை எம்.டி., எம்.பி., சி.எச்.பி. என்ற பட்டங்களை அளித்தது. இதன் பின்னர், இவர் பாரிஸ் நகரம் சென்று, அங்கு காது, தொண்டை முதலியவைகளுக்குச் சிகிச்சை செய்யும் விதங்களைக் கற்றுக் கொண்டார். 1896 இல் நாயர் தாமே ஒரு டாக்டராகத் தொழில் நடத்த ஆரம்பித்தார். இவ்வாறு சற்றேறக் குறைய ஏழு வரு­ங்களை அன்னிய தேசத்தில் கழித்த பின்னர்,1897 இல்  மீண்டும் தமது மாத்ருபூமியை வந்தடைந்தார்.
இவர் இங்கிலாந்து தேசத்தினர்களுடைய நடையுடை பாவனைகளைக் கண்டறிந்து அம்முறைகளையும் அவர்களுடைய விதங்களையும் நமது தேசத்தில் ஸ்தாபித்து, நமது முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். இவர் எடின்பரோ நகரத்திலிருக்கையிலேயே ராஜீய வி­யங்களில் தலையிட்டுக் கொள்ள ஆரம்பித்தார். அங்கிருந்த இந்தியர்கள் சங்கத்தின் காரியதரிசியாகவும், அக்கிரா ஸனாதிபதியாகவும் சில காலமிருந்தார். அங்கு சர்வகலாசாலை மாணவர்கள் சங்கத்தின் மெம்பராகவுமிருந்து, இவர் பொதுஜன வி­யங்களில் மும்முரமாகக் கலந்து கொண்டார். இங்கிலாந்து பார்லிமெண்டு தேர்தல்களில் இவர் சிரத்தைக் கொண்டு, மிஸ்டர் யஹர்பர்ட்பால் என்பவருக்காக உழைத்தார். இவர் இக்காலத்தில் கார்மிகேல் பிரபு, தாதாபாய் நெளரோஜி, டபிள்யூ, ஸி.பானர்ஜி முதலியோர்களால் மிகவும் சிலாகிக்கப்பட்டு, இந்தியர்களுக்காகப் பாடுபட்டு வந்தார். பார்லிமெண்டு தேர்தல்களில் இவர் செய்த உபகாரம் மிகவும் பாராட்டப்பட்டது.
1897 இல் சென்னை நகருக்கு வந்து, இவர் தமது தொழிலை நடத்த ஆரம்பித்தனர். வெகு சீக்கிரத்திலேயே இவர் ஒரு சிறந்த வைத்திய நிபுணர் என்று யாவராலும் கொண்டாடப்பட்டு, மிகுந்த வருமானம் அடைந்தார். செவி, தொண்டை முதலியவற்றைப் பற்றின வியாதிகளைப் போக்க வல்லவர் இவரேயயன எல்லோராலும் புகழப் பெற்றனர். ஆனால்,  அதிகமான சம்பாத்தியம் இவருக்குத் தம் தொழிலில் இருந்த போதிலும், இவர் இவ்வி­யத்தைச் சிறிதேனும் லட்சியம் செய்யாது, தேச சேவை செய்வதில் தீவிரமான அபிலாஷையுள்ளவராயினர்.
இத்தேச சேவாபிலாஷை இவருக்கு 1887 ஆம் வரு­த்திலிருந்தே இருந்தது. ஏனெனில், இவ்வரு­ம் கூடிய தேசீய காங்கிரஸ் மகா சபையில் இவர் ஒரு தொண்டராக உழைத்தார். இவ்வாறு வாலண்டியராக காங்கிரஸ் சபை ஆரம்பத்திலிருந்தே ஊக்கத்துடன் உழைத்த இவருக்கு 1895 இல் மறுபடியும் சென்னையில் காங்கிரஸ் கூடியபோது வாலண்டியர்களின் தலைவர்  பதவி யளிக்கப்பட்டது. இச் சமயம் இவர் கீழ் உதவிய மற்றவர்கள் இவருக்கு அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஒரு ஊன்று கோலைக் கொடுத்தனர். காங்கிரஸ் சபையைச் சார்ந்த சில கமிட்டிகள் கூடிய போது, அவற்றின் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க  சுலபமாகச் சம்மதிக்காத சில அங்கத்தினர்களிடம் இவர் தமது வெறுப்பைத் தைரியத்துடன் தாட்சண்யமின்றத் தெரிவித்தார்.
இவர் சென்னைக்கு வநத காலத்திற்கெல்லாம் தமது தொழிலில் தாமடைந்த உன்னத ஸ்தானத்தைக் கவனிக்காமல், சென்னை நகர பரிபாலன சபையின் அங்கத்தினராகப் பொறுக்கியயடுத்துக் கொள்ளப்பட்டார். இவர் சென்னைக் கார்ப்பொரே­ன் மெம்பராக 15 வரு­ காலத்திற்கு மேலாகவே இருந்து வந்தார். இச்சபையில் இவர் தாம் மேனாட்டில் கண்டறிந்து சிலாகித்த அனுபவங்களையும், சில அரிய முறைகளையும் உபயோகித்து, இச்சபை உயர்ந்த ஸ்தானத்தை எய்தி எல்லோரும் மெச்சத்தகும்படியான வழிகளையே சதா தேடி வந்தார். இவர் முதன் முதலில் சென்னையில் அரசியல் வி­யங்களில் கலந்து கொண்டது இக்கார்ப்பொரே­ன் சபையில்தான். இவர் கார்ப்பொரே­ன் கமி­னராகவிருக்கும் போது, அச்சபை எல்லோராலும் போற்றப்பட்டு வந்தது. இவர் முதலில் தம் நகர பரிபாலன வி­யத்திலேயே தமது மனதைச் செலுத்தினார். இவர் சுய நன்மையை அபேட்சிகாமல் உழைத்து வந்தது ஜனங்களால் போற்றப்பட்டது. கார்ப்பொரே­ன் உத்தியோகஸ்தர்களுக்கு இவரை கண்டால் பயபக்தியுண்டு. ஆனால் நகர ரக்­ண சமாசாரங்களைப் பற்றி, இவருக்கும் சர்.பி. தியாகராய செட்டியாருக்கும் அபிப்பிராய பேதங்கள் அடிக்கடி ஏற்பட்டதுண்டு. இவர் இவ்வாறிருந்த போதிலும் இவற்றைப் பாராட்டாமல் மிகுந்த ஸ்நேக பாவத்துடன் இருந்து வந்தார். இக் கார்ப்பொரே­ன் சபையில் இவர் செய்தவை இங்கு சுலபமாக விவரிக்க இயலாதவைகளாகும். இவற்றுள் முக்கியமானது இவர் தொழிலாளிகளின் நன்மைக்காகக் கொணர்ந்த பிரேரேபணையே. இவர் தொழிலாளிகளின் கஷ்டங்களையும் குறைகளையும் நீக்க, இச்சபையில் மிகுந்த திறமையுடனும், சாமர்த்தியத்துடனும் சண்டையிட்டார். இவர் கார்யங்களனைத்தும் இவருக்கும் மிகுந்த கெளரவத்தை விளைவித்தன.
இவர் சென்னை சட்டசபை மெம்பராகவும் கார்ப்பொரே­ன் அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இச் சட்டசபையில் இவர் வெகுகாலம் இல்லாமலிருந்த போதிலும், சதா பொது ஜன சேவை செய்து வந்தார். சென்னை நகர முனிசிபல் திருத்த மசோதா சட்டசபையில் கொண்டு வரப்பட்ட போது, அரசாங்கத்தாரால் இவர் அதைப் பற்றித் தங்களது தீர்மானத்தைத் தெரிவிக்க ஏற்படுத்தப்பட்ட நிபுணர் கமிட்டியில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இவர் பொது ஜனங்கள் பக்கத்திலிருந்து அஞ்சா நெஞ்சுடன் துரைத்தனத்தாரின் செயல்களை எதிர்த்து வந்தார். இவரே இந்த மசோதா சட்டமானதற்கு முக்கிய காரணஸ்தராக விளங்கினார்.
இவர் செய்த காரியங்கள் எல்லாவற்றிலும் முக்கியமானது, இவர் பிராம்மணரல்லாதார் இயக்கத்தை ஆரம்பித்ததேயாகும். இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. ஒரு சமயம் இவர் திருவல்லிக்கேணி குளத்தை தூற்று, அதன் மீது ஒரு பூந்தோட்டம் நிர்மாணிக்கப்பட வேண்டுமென்ற தமதெண்ணத்தைத் தெரிவித்தார். இது உடனே திருவல்லிக்கேணி வாசிகளின் கோபத்தை எழுப்பியது. இவர் அவ்வரு­ம் திருவல்லிக்கேணி பிரதிநிதியாகக் கார்ப்பெரே­ன் மெம்பர் பதவியை அடைய விரும்பினார். இதனால் இவரது மனோபீஷ்டம் நிறைவேறு வதற்குச் சரியான சந்தர்ப்பம் வாய்க்குமென்று பயந்த திருவல்லிக்கேணி வாசிகள் இவருக்குப் பதிலாக ஒரு பிராம்மணரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இதுவுமல்லாமல், இவர் ராஜப் பிரதிநிதி சபையின் மெம்பராக வேண்டுமென்ற அபிலா­யுடன் இருந்தார். அதில் இவருக்குப் போட்டியாக நின்ற மகாகனம், ஸ்ரீ நிவாஸ சாஸ்திரியார் வெற்றி பெற்றார். இவ்வாறு இரண்டு தடவைகள் பிராம்மணர்களிடம் தோல்வியுற்ற இவருக்குப் பெரும் பிராம்மணத் துவே­ம் உண்டாயிற்று. பிராம்மணரிடம் பகைமையை வெளிக்காட்டத் தீர்மானித்த இவர், உடனே பிராம்மணரல்லாதார் கட்சியை ஸ்தாபித்து நிலைநிறுத்தவராம்பித்தார். இவர் சில காலம் இதர அரசியல் வி­யங்களில் தலையிட்டுக் கொள்ளாமல் தாம் ஆரம்பித்த புதுக் கட்சிக்காகவே சிரமப்பட்டு வருவாராயினர். இவர் இக் கட்சியைக் கிளப்பியதன் காரணம் யாதெனில் பிராம்மணரல்லாதார்களுக்கு உன்னதப் பதவிகளை வாங்கிக் கொடுத்து, பிராம்மணர்கள் அது பரியந்தம் அனுபவித்து வந்த ஸ்தானங்களுக்கு அவர்களை உயர்த்த வேண்டுமென்பதுதான். அவர் இவ்வாறு ஆரம்பித்த ‘ஜஸ்டிஸ்’ கட்சியில் சர்.தியாகராயச் செட்டியாரும் பனகல் ராஜாவும் வந்து சேர்ந்து, அதன் பலத்தை அதிகப்படுத்தினார்கள். பிராம்மணரல்லாதவர்களுக்காகத் திடமான எண்ணத்துடன் உழைத்தவர் இவரே. அவர்கள் இவருக்கு எக்காலமும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்.
அரசாங்கத்தார் இவர் கார்ப்பொரே­னில் செய்து வந்த காரியங்களை மெச்சி கெய்ஸர்‡இ‡ஹிந்து தங்கப்பதகத்தை இவருக்களித்தனர். சென்னை சர்வகலாச் சாலை செனெட் சபையிலும் 1910 முதல் 1919 வரையிலும் மெம்பர் பதவியை வகித்தார்.
1917 இல் ஜஸ்டிஸ் பத்திரிகையாரம்பிக்கப்பட்ட போது, இவர் அதன் பத்திரிகாசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் பத்திரிகாசிரியராகவிருந்த நாளில் பிராம்மணரல்லாதார்கள் பக்கத்தையே ஆதரித்து எழுதி வந்தார். இவர் எழுதிய வாக்கியங்களில் ஆழ்ந்த அர்த்தமும், ததும்பும் எண்ணங்களும் நிறைந்திருக் கின்றன. இவர் பிறர் அதிகாரத்தை சகியார். இவர் இக்காலத்தில் பெசண்ட் அம்மையாருடன் சண்டையிட்டு, ராஜீயப் போராட்டத்தில் அரசாங்கத்தாருடன் ஒத்துழைப்பே முக்கியமெனக் கருதினார்.
இவர் பேசுவதில் சமர்த்தர் எனும் பெயர் பெற்றார். வாதாடுந் திறமையும் இவரிடமிருந்தது. இவர் எதைப் பற்றி பேசினாலும் இவரை சூழ்ந்து கொண்டு எல்லோரும் இவரது வார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்த்து வருவார்களாம். ஆகவே, இவரது சொற்களுக்கு மிகுந்த கெளரவம் சம்பவித்தது. தஞ்சை ஜில்லா மகாநாட்டில் இவர் அக்கிராசனாதிபதியாகவிருந்து செய்த பிரசங்கமானது கேட்டோர் அனைவராலும் வியப்புடன் போற்றப்பட்டது. ஹாஸ்ய ரசம் பொருந்திய இவரது வசனங்கள் அநேகருள்ளத்தில் சந்தோ­த்தையும் குதூகலத்தையும் எழுப்பின.
1919 இல் பிராம்மணரல்லாதார் கோஷ்டியின் பிரதிநிதியாய், இங்கிலாந்தில் பார்லிமெண்டுக் கூட்டுக் கமிட்டியின் முன்பு சாட்சியஞ் சொல்ல, இவர் அழைக்கப்பட்டார். அப்போது இவருக்கு கொஞ்சம் தேக அசெளக்கியம் இருந்தது. ஆனாலும், தமது அசெளக்கியத்தைச் சட்டை செய்யாமல், தமது கட்சியே தமக்குப் பிரதானமென்றும் அதன் நன்மைக்காக எவ்விதத்திலாயினும் பிரயாசைப்பட வேண்டுமென்றும், இவர் இங்கிலாந்து செல்ல மனவொப்பினார். இவர் அங்க செல்லுமுன் தமது நண்பர்கள் சிலரிடம் தாம் நிச்சயமாய் மீண்டும் இங்கு திரும்புவது துர்பலம் என்று சொன்னாராம். இங்கிலாந்திற்குப் போய் சில காலம் கழிவதற்குள்ளேயே, 1919 ஆம் வரு­ம் சூலை மாதம் 17 ஆம் தேதியன்று தமது 53 ஆவது பிராயத்தில், கிளோவர்ஸ் கிரீன் என்னுமிடத்தில் மரணமுற்றார். இவருடன் அங்கு சென்றிருந்த இவரது நண்பர்கள் பனகல் ராஜா, சர்.கே.வி.ரெட்டி முதலியோர் இவரது தகனக் கிரியைகளை அவ்விடத்திலேயே செய்வித்தனர். இவரது தேக வியோகத்தால் பிராம்மணரல்லாதார் கட்சி வலது புஜத்தை இழந்தது போலாயிற்று.
தமது கட்சிக்காகத் தமதுயிரையளித்த தியாகி என்ற பெயர் இவருக்குத் தகும். (இளந்தமிழன், சூன் 2010).

அண்ணாவின் திராவிடநாடு ஒரு வரலாற்று ஏடு

அண்ணாவின் திராவிடநாடு ஒரு வரலாற்று ஏடு

திராவிட இயக்க இதழ்களின் பரிதாப நிலை திராவிடரியக்கதார் இதழ் நடத்த ஏற்ற இன்னல்கள் எவர் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கும்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் செயலாளர் சர்.பி.தியாகராயர்
 ‘திராவிடன்’ நாளிதழை ஆதரிக்குமாறு விடுத்த உருக்கமான வேண்டுகோள் (1919)!
சர்.பி. தியாகராயர், 1916 இல் துவக்கப்பட்ட பிராமணரல்லாதரின் அரசியல் அமைப்பான, தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் செயலாளர் ; அச்சங்கத்தின் சார்பாகச் செய்தித் தாட்களைத் துவக்கி வெளியிட வேண்டுமென அமைக்கப்பட்ட ஓர் அமைப்பான தென்னிந்திய மக்கள் சங்கத்தின் செயலாளர். தியாகராயர் தம் கையயழுத்திட்டுக் கீழ்க்கண்ட வேண்டுகோளை 1919 இல் விடுத்தார். அவ்வறிக்கை பிராமணரல்லாதாரின் அக்கறையின்மையையும் அலட்சியத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
அந்நோயிலிருந்து இன்னும் அவர்கள் விடுபடவில்லை என்று, 1957 டிசம்பர் முதலாம் தேதியிட்ட 01.12.57, சண்டே அப்சர்வர் (Sunday observer) இதழில் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் அதன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டு, தியாகராயரின் அறிக்கையினை வெளியிட்டார்.
உங்கள் சிந்தனைக்கு அவ்வறிக்கை:
1916 இல் தான் பிராமணரல்லாதார் இயக்கம் உருவாக்கப்பட்டது என்பதை எவ்வித ஐயமின்றி நீங்கள் அறிவீர்கள். அவ்வியக்கத்தின் உண்மை நிலையை மக்கள் முன்பு எடுத்துக் கூறி மக்களுடைய பேராதரவையும் பெறத்தான் மூற்விமிஷ்உe  (‘நீதி’) என்ற செய்தித்தாள் 1917 பிப்ரவரித் திங்கள் 27 ஆம் தேதி துவக்கப்பட்டது. அதை ஒட்டி, நான்கு திங்களுக்குப் பிறகு, 1.6.1917 இல் ‘திராவிடன்’ என்ற தமிழ் இதழும், ‘ஆந்திரப்பிரகாசிகா’ என்ற தெலுங்கு இதழும் தொடர்ந்து வெளி வந்தன.
மிகவும் இக்கட்டான நிலைகளிலும், நேச மனப்பான்மை இல்லாத நிலையிலும் தான் இவ்விதழ்கள் தங்கள் வாழ்வைத் தொடங்கின.
ஐஸ்டிஸ் இதழை வாங்காதே!
‘நீதி’ (Justice) நாளிதழ் வெளிவருவதற்கு முன்னாலேயே தல சட்டசபைக் கவுன்சிலின் உறுப்பினர்களான, ஐந்து பிராமணர்கள், அரசாங்கத்தைக் கேள்வி களுக்கு மேல் கேள்விகள் கேட்டனர். அரசாங்கத்தால், அவ்விதழுக்கு ஆதரவு தரப்படுமா என்று!
அதாவது அவ்விதழ் பிறப்பதற்கு முன்பே அவ்விதழின் கண்ணோட்டத்தைச் சிறுமைப்படுத்துவதற்காகவே இவ்விதம் கேட்கப்பட்டது.
இந்த வெறுப்பு இன்னமும் தொடர்ந்து இருக்கிறது.
அலுவலர்கள், பிராமணரல்லாதாரான உறுப்பினர்களை முடிந்தவரைக்கும் அலுவலகத்தில் அதிருப்தியையும் அச்சத்தையும் ஊட்டிப் பயமுறுத்துகின்றனர். பிராமண வக்கீல்களும் பிராமணப் பள்ளி ஆசிரியர்களும் அவ்வாறே இதழை வாங்காதவாறு செய்கின்றனர்.
இத்தகைய பெரிய பயங்கரமான எதிர்ப்பை ஏற்படுத்தி, ‘இந்து’ நாளிதழுக்கு அதிகமான அளவுக்கு அலுவலர், வக்கீல், பள்ளி ஆசிரியர் மூலம் சந்தாதாரர் களாகவும், மற்றொரு இதழான ‘நியூ இந்தியா’வுக்கு கணக்கில்லாதபடி சந்தா சேர்த்து வளர்ச்சியடையவும் , நம்முடைய இதழ்களுக்கு உறுப்பினர் தொகை மிகவும் கொஞ்சமாகவும் இருக்கும்படி செய்கின்ற அளவுக்கு, எதிர்ப்பு வேலை செய்யப்படுகிறது.
1919 இல் ரீம் விலை
போருக்கு முன் ஒரு ரீம் ரூ 4 ஆக இருந்தது. அதை ஒட்டி ரூ10 ஆகவும் உயர்ந்தது. பின் நம் இதழ்கள் தொடங்கப்பட்ட போது ரூ 16 ஆகவும் உயர்ந்ததை நினைத்துப்பார்ப்பின், நமது இயக்குநர்கள் பலவித இன்னல்களுக்கும் தொல்லை களுக்கும் இடையில் எத்தகைய பொருளாதாரப் பிடிப்புகளையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை மிக எளிதில் அறியலாம். உறுப்பினர்கள் அவ்வப் போது பணம் செலுத்தாததினால் இத் தொல்லைகள் பெருத்த அளவில், மேலும் அதிகரிக்கின்றன.
இடைவிடாத அலுவலகக் கொடுமையாலும், தோற்றத்தைப் பற்றிய நச்சுத் தன்மையான பிராமணர்களின் பொய்யுரைகளாலும் , அவ்விதழ்கள் வெகு விரைவில் மறைய நேரிடலாம்.
நாளிதழ் -வார இதழாயிற்று
காகிதப் பற்றாக்குறையும், புறக்கணிப்பும் இருப்பதாலும், போர் முடியுமுன், பெருத்த அளவில் இருப்பு வைக்க வேண்டியதை அறிந்ததாலும், இத்தகைய சூழ்நிலைகளுடன் வாழ்வுக்காக இத்தகு நிலையற்ற ஆபத்தான போராட்டத்தை அவ்விதழ்கள் செய்ய வேண்டியிருப்பதாலும், ‘திராவிடன்’ இதழையும் ‘ஆந்திரப் பிரகாசிகா’இதழையும் வார இதழாக ஆக்கித் தீர வேண்டிய துயரமிக்க அவசியமாய் விட்டது இயக்குநர்க்கு. ஒரு சில பெருந்தன்மையான சமீன்தார்கள், நிலக்கிழார்கள் மற்றுமுள்ள உண்மை நண்பர்களின் இதயபூர்வமான ஆதரவும், காலத்தினால் செய்த ஆதரவும் இல்லாவிட்டால் நாம் தப்பிக்க முடிந்திராது.
2 ஆண்டுகள் 9 திங்களில் அடைந்த பலன்
2 ஆண்டுகளும் 9 திங்கள்களும் கொண்ட வாழ்வையுடைய இவ்விதழ்கள் அவற்றின் வேலையைச் செய்துள்ளன. அவற்றின் பயனை நம்முடைய கூடாப் பகைவரும் மறுத்திட முடியாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. பிராமண ரல்லாதாரின் சமுதாயத்தில் நம்பிக்கையையும், உளப்பான்மையையும் உண்டாக்கி யிருக்கின்றன. புதிய சிந்தனைகளையும் செயல்களையும் புரிய வழி திறந்து விட்டிருக்கின்றன. பயனுள்ளவற்றை புரியப் புத்தம் புதிய துறைகளைத் திறந்து விட்டிருக்கின்றன.
பிராமணரல்லாதாரின் வகுப்புவாதக் கோரிக்கை இந்திய அரசின் கருத்தைக் கவர்ந்தது.
இவ்விதழ்கள் தொடர்ந்து பணிபுரிந்திராவிடில், வகுப்புவாரித் தேர்தல்களும் பிரதிநிதிகளும் வேண்டும் என்ற பிராமணரல்லாதாரின் கோரிக்கையானது, இப்போது கவனத்தை ஈர்ப்பதைப் போல், இந்த பார்ப்பனர்களால் ஆதிக்கம் புரியப்படும் இந்த சென்னை அரசின் கவனத்தையும் கவர்ந்திருக்க முடியாது. எப்பொழுதுமே சென்னை மாகாண அரசியல் ஒதுக்கப்பட்ட ஒன்று என்பதாகத்தான் கருதிடும். இந்திய அரசின் கவனத்தையும் கவர்ந்திருக்க முடியாது. இவ்விதழ்களின் ஆக்கப் பணியில்லாவிட்டால் சர்.சங்கரன் நாயரும், இந்நாட்டுச் செயலாளரும், தங்களின் உச்ச வெறுப்பு நிலையிலிருந்து பார்ப்பனரல்லாதார் கோரிக்கைக்காகக் கீழிறங்கி இருக்க மாட்டார்கள். நம்முடைய பொருளாதாரப் பிடிப்புத் தொல்லைகள் இன்னும் தொடர்கின்றன.
நேரிய முறையில், உடனடியாக செயல்தான் இப்போது மிகவும் தேவை. அவ்விதழ்கள், போதுமான பணமும், நேர்மையான ஆதரவும் இன்றி அவை நிறுத்தப்படுமானால், நம்முடைய இயக்கம், இறப்பு எனும் ஆபத்தில் இருக்கும்; நம்முடைய முன்னேற்றம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்தங்கி நிற்க வேண்டி யிருக்கும்.
ஒவ்வொருவரும் ஜஸ்டிஸ் இதழுக்கு சந்தாதாரர் ஆவீர்
ஆகவே, இக்காரியத்தைப் பொறுத்தமட்டில் உடனடியாக செயல் தேவைப் படுகிறது. ஒதுங்கியிருப்பதும், பார்த்துக் கொண்டிருப்பதும் முறை அல்ல. தியாகம் இன்றி எதையும் அடைய முடியாது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். உங்களை இயக்குநர்கள் கேட்டுக் கொள்வது; நீங்கள் நேர்மையான யுளத்துடன் உதவி புரிய முன் வாருங்கள். 28 மிலியன் மக்கள் கொண்ட ஒரு பிராமணரல்லாதார் சமுதாயத்திற்கு, இவ்விதழ்களால் வகுப்புவாரி முயற்சிகளால் போதுமான பொருளாதார ஆதரவைப் பெற முடியாதா? ஒவ்வொரு பார்ப்பனரல்லாத அலுவலரை, ஆசிரியரை ‡ திங்களுக்கு ரூ 75 யும் அதற்கு மேலும் பெறுவோரை ‡ வக்கீல்களை, வியாபாரிகளை, நிலக்கிழார்களை எல்லாம் இயக்குநர்கள் நம்பிக்கையுடன் கேட்டுக் கொள்வது என்னவெனில் ‡ ஒவ்வொருவரும் ‘நீதி’ இதழுக்குச் சந்தாத் தொகை செலுத்தவும், இரு மொழிகளில் நடைபெறுவனவற்றில் ஒன்றிற்குத் தன் குடும்பத்தினரின் பயனுக்கெனவும் சந்தாத் தொகை செலுத்துவும், இவ்விதம் செய்வதன் மூலம் இவ்விதழ்கள் தொடர்ந்து நடத்திடவும் பார்ப்பன ரல்லாதார் இயக்கம் வெற்றி பெறவும் வேண்டும் என்பது தான்.
போதுமான அளவுக்கு இப்போது உறுப்பினர்கள் தம் பெயரைப் பதிவு செய்தால், இயக்குநர்கள் ‘ஜஸ்டிஸ்’ ( நீதி ) இதழை 16 பக்கங்களாகப் பெரிதாக்கவும், முடியுமானால் விலையைக் குறைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக் காலத் திற்குத் தேவையான இதழாகத் திகழும். அரசியல்,கலை, தொழில் கல்வி தொடர்பான எல்லா மாவட்ட, மாநிலங்கள் செய்திகளும் வெளிநாட்டுச் செய்திகளும் இடம் பெறும்.
தமிழ் இதழ் நாளிதழாகவும், தெலுங்குஇதழ் கிழமைக்கு இரண்டாகவும் இருக்கும். இத்தகைய சிறந்த கருவிகளால் , நம்முடைய சமுதாயத்திற்கு வரம்பற்ற அரசியல் நன்மைகள் ஏற்படும். நம்முடைய பணி, தொல்லைக்குள்ளானது; சுமை, கனமானது. ஆதலால் உங்கள் உதவி, மிக மிக, உடனடியாக அவசியமாக அதிகமாகத் தேவையானதாகிறது. தொடர்ந்த உறுதியான நோக்கம், ஆற்றல், ஊக்கம் முதலியவற்றுடன் அனைவரும் கூடி செய்யும் முயற்சியால் விளையும் நல்ல உருவான நன்மைகளை, நாம் பெற வேண்டும்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ‡ பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டது
இந்த மாநிலத்தில், பார்ப்பனரல்லாதாருக்காக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற கொள்கைக்குக் கூட்டுப் பாராளுமன்ற குழு ஒப்புதல் அளித்துவிட்டதை நீங்கள் அறிந்து இருக்கிறீர்கள். இரண்டரை ஆண்டுகளாக இடையறாது உழைத்ததின் நேரிடையான பலன்தான் அவ்விளைவு அல்லவா? உணர்ச்சிக்கு ஆட்படாதவரும், உரிய கண்ணோட்டக்காரர்களும் அதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.
நமது அமைப்பு மறைந்து போகுமானால்....!
ஆனால் இன்னும் அரிய பொருள்களும் இன்னும் சிறந்த காலமும் நமக்கு வர இருக்கின்றன. நமது அமைப்பு மறைந்து போகுமானால், அல்லது மக்கள் ஆதரவும் நம்முடைய சார்பில் இடையறாத நம்பிக்கைகள், துஞ்சாத கண்காணிப்பு முதலியவை இல்லாமையால், நமது அமைப்பின் வலிமை குறையுமானால், நமது உரிமைக் குரலை எழுப்புவதற்கு எதிர்காலத்தில், முற்றிலும் உதவியற்ற நிலையில் இருப்போம் என்பது மட்டுமல்ல ; மூன்று ஆண்டுகளாக ஆக்கத்துடன் ஊக்கத்துடன் பாடுபட்ட உழைப்பையும் இழந்து விடுவோம் ; திரும்பவும் பெற முடியாதபடி இழந்து விடுவோம். ஆகையால் தான், என்னிடமுள்ள நேர்மையுளத்துடன் உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களிடையே இருக்கும் வேற்றுமையை விட்டு விடுங்கள் ; நம்முடைய இதழ் ஜஸ்டிஸ் (நீதி) எதற்காகப் பாடுபடுகிறதோ, அதற்காக நீங்கள் விடாது உழைத்து நிலைபெறச் செய்திடுங்கள். தன்னந்தனியான மனிதர்களாக மட்டுமல்ல ; ஓர் எழுச்சிமிக்கத் தன்மானமிக்கத் தன்னம்பிக்கை மிக்க ஒரு சமுதாயத்தைப் போல், நேர்மையாகப் போராடுவதைப் போல், ஆண்மையோடு போராடுவதைப் போல், உயர்ந்த எண்ணங்களுடன் கூடிய, ஒன்று கூடி அமைக்கப்படும் வாழ்வையும் அதைத் தொடரும் சமுதாய நாட்டுச் சிறப்பையும் அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் துஞ்சாது அயராது உழைக்கும்படி நான் நேர்மையுடன் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
1919 இல் தியாகராயரின் வேண்டுகோள் இவ்விதம் அமைந்திருந்தது.
தமிழாக்கம்: ‘நிறை’(இளந்தமிழன் சனவரி,2009)

சர் தியாகராயரின் மறையயாட்டி அப்பொழுது இந்து நாளேடு வெளியிட்ட செய்தியில் ஒரு பகுதி...

சர் தியாகராயரின் மறையயாட்டி அப்பொழுது இந்து நாளேடு வெளியிட்ட செய்தியில் ஒரு பகுதி...

ஒப்பற்றத் தலைவர்

பேச்சு ஒன்றில் தியாகராயர் குறிப்பிட்டார், இந்த இயக்கத்தைத் தோற்றுவித்ததன் நோக்கம், பிராமணர்கள் மீது வெறுப்பைக் காட்டுவதற்கன்று; பிராமணர் அல்லாதவர்களை உயர்த்துவதற்குத் தான். எங்களுக்கும் பிராமணர்களுக்கு மிடையே எந்த வேறுபாடம் இல்லை. பிராமணர்களுக்கு எதிராக எந்த புகாரும் எங்களுக்கில்லை. அவர்கள் எப்போதும் எங்கள் நண்பர்கள். ஆனால், எங்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதிச் சமுதாயத்தில் கீழே மிதித்து அழிக்கும் ஆதிக்க பிராமணர்களுக்கு எதிராகத்தான் எங்கள் போராட்டம்.
உண்மையான குடிமகனாக சீரிய தொண்டராக வீரமுடன் போரிட்டுக் கொள்கையை நிலைநாட்டும் தீரராகக் கடந்த 40 ஆண்டுகளாகச் சென்னை நகருக்கும் இந்த நாட்டுக்கும் தொடர்ந்து பணியாற்றியவரின் மறைவிற்கு இம் மாகாண மக்கள் இரங்கலை தெரிவிக்கின்றனர்.
திரு.பி.தியாகராய செட்டியார் உறுதியான கொள்கைப் பற்றும் பழக்க வழக்கங்களும் கொண்டவர். அவரது எண்ணங்களை மறைத்துப் பசப்பாமல் தெளிவுடனும் திடமுடனும் உரைத்திடும் திண்மைப் பெற்றவர். நீண்டகாலம் அவர் சமயப் பற்று மிக்க இந்துவாக இருந்தார்.
ஆனால், பிராமணர் அல்லாதவர் நலம் காக்கும் இயக்கம் தொடங்கிய பின்னர், பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்து பிராமணர் அல்லாதாரை விடுவிப்பதென்றும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பிராமணர் அல்லாதார் நலம் காக்கும் இயக்கம் ஒப்பற்ற உறுதி படைத்த தலைவரை இழந்து விட்டது. அந்த இழப்பை நிரப்ப முடியாது. பொதுமக்கள், உண்மையான நாணயம் மிக்க குடிமகனை இழந்துவிட்டனர். (1925 இந்து நாளேட்டிலிருந்து) (இளந்தமிழன், ஏப்ரல் 2010).

1.5.1925 நவசக்தி இதழில் அதன் ஆசிரியர் தமிழ்த்தென்றல் திரு. வி.க. அவர்கள் தியாகராயர் மறைவுக்கு (27.4.1852-28.4.1925) வருந்தி எழுதியது.

1.5.1925 நவசக்தி  இதழில் அதன் ஆசிரியர் தமிழ்த்தென்றல்  திரு. வி.க.  அவர்கள் தியாகராயர் மறைவுக்கு (27.4.1852-28.4.1925) வருந்தி எழுதியது.

நம் பெருங்கிழவர் சர்.பி.தியாகராஜ செட்டியார் சென்ற செவ்வாய்க்கிழமை, இரவு நம்மை விட்டுப்பிரிந்தார். இவ்வுலக வாழ்வு நீத்தார்; விண்ணுலகெய்தினார். அன்னார் அரசியல் நோக்கத்துக்கு மாறுபட்டு நிற்கும் மனமுடையோமாயினும், அவரது பிரிவு, எமது உள்ளத்தை உருக்குகிறது. எழுதவும் முடியவில்லை. தியாகராஜர் பிரிவை உன்னங்கால் அப்பிரிவு - ஆறும், மலையும், கூவலும், குளமும், கலையும், தொழிலும், மக்களும், ஒழுக்கமும் பலபடச் செறிந்த ஒரு பெருந் திருநகரம் திடீரென மறைந்தது போல் எமக்குத் தோன்றுகிறது. அந்தோ! தியாகராஜ மலையுஞ் சாய்ந்ததோ! என்று அழுகிறோம். ராஜ கெம்பீரத் தோற்றமும், திருநீற்றொளியும் சிங்க நோக்கும், மலர்ந்த முகமும், பீடு நடையும், அஞ்சா நெஞ்சும், ஆவின் இயல்பும் உடைய ஒரு பெரும் வடிவை இனி என்றே காண்போம்! எமதாருயிர்த் தியாகராஜரை இனி என்றே காண்போம்!
தியாகராஜர் பரு உடல் மறைந்தாலும் அவர் நுண்ணுடல் நாட்டிடை உலவுகிறது. அப்பெரியார் வாழ்வு பின் வருவோர்க்குப் பேரிலக்கியம் போன்றது. தியாகராஜர் 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி இம் மாநிலத்தில் உதித்தார். அவர் 1925 ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி மறைந்தார். எழுபத்து மூன்றாண்டு இவ்வுலகிடை வாழ்ந்த ஒரு பெரியார் வாழ்வு போற்றுந் தகையதன்றோ? வாழ்வெனில் எத்தகை வாழ்வு? அடிமை வாழ்வா? உரிமை வாழ்வு -ஒழுக்க வாழ்வு. அத்தகைய வாழ்வு ஒரு பெரும் இலக்கியமாகாதோ?
தியாகராஜ செட்டியார் தேவாங்கர் குலத்துதித்தவருள் முதன் முதலாக பி.ஏ. பரீட்சையில் தேறினவர். அந்நாளில் அப்பரீட்சை அடிமைத் தொழிலுக்குப் பெரிதும் பயன்பட்டு வந்தது. திருமிகு செட்டியார் தம் கல்வி அறிவை அடிமைத் தொழிலுக்கு அந்நாளில் பயன்படுத்தினாரில்லை. அவர் வாழ்வு, உரிமையில் தோன்றி உரிமையில் மலர்ந்து, உரிமையில் காய்த்து, உரிமையிலேயே கனிந்து சென்றது.
வாழ்விற் சிறந்த செட்டியார், நாற்பதாண்டு நகர பரிபாலன சங்கத்தில் இடை விடாது அங்கம் பெற்று, அக்காலத்தின் இறுதியில் மூவாண்டு அச்சங்கத் தலைவராக வீற்றிருந்து சென்னைக்குச் செய்த சேவையைச் சென்னை மாதே அறிவாள். தற்போதைய சென்னை நகரம் செட்டியாரது உழைப்பின் பரிணாமம் என்று கூறுவது மிகையாகாது. சென்னையிலோடும் கூவ நதியைத் தூய்மைப்படுத்த வேண்டு மென்பது அவர்தம் பெருந்தவம். அது பற்றி அவர் பெருமுயற்சி செய்து வந்தார். உயிர் துறப்பதற்குச் சின்னாள் முன்னரும் சென்னைக் கவர்னருடன் கூவ நதியைப் பற்றி அவர் பேசினாராம். கூவ நதியைச் சீர்மைப்படுத்த வேண்டுமென்று செட்டியார் உள்ளத்திலெழுந்து நிலவிக் கொண்டிருந்த சீரிய எண்ணம், விரைவில் நிறைவேறுங்காலம் வருமாறு ஆண்டவனை வேண்டுகிறோம்.
காலஞ்சென்ற  தியாகராஜ செட்டியார் , இந்தியக் கைத்தொழில் வளர்ச்சியிலும், இந்திய வைத்திய முயற்சியிலும், பெருங்கவலை செலுத்தி வந்தார். சுருங்கக் கூறின் செட்டியாருக்குச் சுதேசியியக்கத்தில் இடையறாப் பேரன்பு உண்டு என்று கூறலாம். செட்டியார் எந்நாளும் ஆங்கில உடைக் கோலத்தை விரும்பியதில்லை.இந்திய வெள்ளிய உடையே போர்வையாக அவரை அழகு செய்து கொண்டிருக்கும். அவர் இளவரசர், ராஜ பிரதிநிதி முதலியோரைக் காணப் போகும்போதும் தாம் என்றும் இயல்பாக அணிந்துலவும் வெள்ளிய உடையணிந்தே போவார். திருவாளர் செட்டியார் நாட்டு மருந்தையே பெரிதும் உண்பார். நாட்டு மருந்தில் அவர்க்குள்ள பற்றுக்கு ஓர் அளவில்லை.
தியாகராஜப் பெரியார், கடவுள் வழிபாட்டிலும் வைதீக ஒழுக்கத்திலும் அன்பு வாய்ந்தவர். அவர் பிராமணரல்லாதார் இயக்கத்தைக் கிளப்பிய போதும், வைதீக பிராமணர் பால் தமக்குள்ள நேயத்தைப் புலப்படுத்தியது பலர் அறிந்த தொன்றே. தியாகராஜ செட்டியார் திருமுகத்தில் சமயச் சின்னம் என்றும் பொலிந்து கொண்டிருக்கும்.
தியாகராஜ செட்டியார் வாழ்வில் அறியக் கிடக்கும் நறுங்குணங்கள் பல. அவைகளுள் தலையாயது அவர்பால் சுயநலமின்மை என்பது. அவர் பரு உடல் மறையும் மட்டும் தமது நலங்கருதி எச் செயலும் நிகழ்த்தியதாகத் தெரியவில்லை. லார்ட் வெல்லிங்டன் காலத்தில் தமக்கு நல்கப்பட்ட மந்திரிப் பதவியை வேண்டாமென்று செட்டியார் மறுத்ததொன்றே அவரது சுயநலமின்மையை வலியுறுத்தும். இக்குணம் அவர்பாலிருந்தமையாலன்றோ சென்னை வாசிகள் அவரைச் சட்டசபை அங்கத்தவராகத் தெரிந்தெடுத்தார்கள். சென்றமுறை அவர்க்கு மாறாக அவர் கட்சியாருள்ளிட்ட பல கட்சியார் பிரசார வேலை செய்தும், சென்னை, செட்டியாரைக் கைவிடாது காத்தது. இதற்குக் காரணமாக நின்றது அவர்பால் சுயநலமின்மையே என்றே சொல்லலாம்.
ஒழுக்கத்திற் சிறந்த செட்டியார், எவர்க்கும் அஞ்சாது தமது மனச்சான்றுக்குத் தோற்றுவதை உள்ளவாறே வெளியிடுவர். பிறர் புகழ்வதை எதிர்நோக்கிச் செட்டியார் எதையும் மறைத்துப் பேச மாட்டார். அவர் பளிங்கனைய மனமுடையார். தியாகராஜ செட்டியார் நோக்கு, சிங்கம் போன்றதாயினும், அவர் இயல்பு ஆவையயாத்தது. இது அவரோடு பழகிய நண்பர்கட்குத் தெரியும். தியாகராஜர் எக்கருமத்தையுங் காலத்தில் செய்பவர். கால தேவதையின் சீற்றத்துக்கு அவர் என்றும் ஆளானதில்லை.
தியாகராஜ செட்டியார் தமது வாழ்வில் எத்துணையோ அறநிலையங்கட்கும், வாணிபச் சங்கங்கட்கும், கல்விக் கழகங்கட்கும் தலைவராகவும், அங்கத்தவராகவும் இருந்து சேவை செய்திருக்கிறார். அவரது வாழ்வு பெரிதும் பரோபகார வாழ்வாகவே நடந்து வந்தது. இல்லறத்திலிருந்து இத்துணைத் தொண்டு செய்த ஒருவர் வாழ்வு பின் வருவோர்க்கு இலக்கியம் போன்றதென்பது மிகையாகாது.
தியாகராஜ செட்டியார் அரசியல் வாழ்வில் குறிக்கத் தக்கது ஒன்றுள்ளது. அஃது, அவர் தமது முதுமைக் காலத்தில் தோற்றுவித்த, ஜஸ்டிஸ் கட்சி என்னும் ஒரு கட்சியைப் பற்றியதாகும். அக்கட்சியின் ஆக்கங் குலைவுற்றிருப்பினும் அதன் பயன்,  நாட்டில் பலமுகங்கொண்டு,  நுண்மையாக பலதிறச் சீர்திருத்த வேலைகளைச் செய்து வருவதுண்மை. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்பாடல் சுயராஜ்யப் பாடலாக மாற வேண்டும் என்பது நமது விருப்பம்.
செல்வத்திற் சிறந்த தியாகராஜ செட்டியார், பரந்து விரிந்த சோலைகள் சூழ்ந்த அரண்மனை என்று சொல்லத்தக்க தமது பெரு மாளிகையில், கிராமத்தாரைப் போல தோய்த்து உலர்ந்த வேட்டிகளிரண்டு-கீழொன்று மேலொன்று அணிந்து, தம்மைக் காண வருபவரோடு பேசுங்காட்சி எமது முன்னே தோன்றி எமது உள்ளத்தைக் குழையச் செய்கிறது. குழைந்துருகும் உள்ளத்தோடு அவரது குடும்பத்தாருக்கு எமது அனுதாவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பெருங்கிழவர் ஆன்மா சாந்த நிலை எய்த எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகிறோம்! (நவசக்தி 1.5.1925). (இளந்தமிழன், ஏப்ரல் 2010)

சர்.பிட்டி தியாகராயர் மறைவு

சர்.பிட்டி தியாகராயர் மறைவு
உள்ளத்தை உருக்கும் தியாகராயரின் இறுதி ஊர்வலக் காட்சிகள் (27.4.1852 -28.4.1925)
பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர் தியாகராசயச் செட்டியார் சென்னையில் 28.4.1925 அன்று இரவு 9.45 மணிக்கு காலமானார்.
அவருக்கு அஞ்சலி செய்யப் பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரண்ட காட்சி மக்கள் அவரிடம் கொண்டிருந்த பற்றையும் பக்தியையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. அவர் சென்னையின் மூத்த பெரும் குடிமகனாகத் திகழ்ந்தார்.
இச்செய்தி காட்டுத் தீயைப் போல் சென்னையிலும் தமிழகத்திலும் பரவி பெரியவர்களும் இளைஞர்களுமாக, செல்வந்தர்களும் ஏழைகளுமாக ஆண்களும் பெண்களுமாக அவர் வாழ்ந்த தண்டையார்ப்பேட்டை மாளிகையை நோக்கி ஓடி வந்தனர்.
தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்தவும் இறுதியாகத் தம் தலைவரின் திருமுகத்தைக் காணவும் துடித்தனர். தியாகராயரின் இறுதி ஊர்வலம் மறுநாள் 5.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை முழுவதும் பல்லாயிரக் கணக்கில் சென்னையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை மாளிகையில் நாடு முழுவதிலு மிருந்து வந்து குவிந்து கொண்டிருந்த மக்கள் அவருடைய அருள் பணிகளையும் அவர் வாழ்வில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் பற்றிப் பேசிப் பேசி மன ஆறுதல் பெற முனைந்தனர்.
அவருடைய திரு உடல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட விமானத்தில் அமர வைக்கப்பட்டிருந்தது. தேவாங்கர் குல வழக்கப்படி உட்கார வைக்கப்பட்டிருந்த உடலைச் சுற்றி நடுத்தர, ஏழை மக்கள் அழுதபடி பெருந்துயரத்திலாழ்ந்திருந்தனர்.
வருகை தந்து அஞ்சலி செய்தவர்களில் முக்கியமானவர்கள் பனகல் அரசர், கே.வி.ரெட்டி, எஸ்.ஆர்.எம். அண்ணாமலைச் செட்டியார், மாண்புமிகு நீதிபதிகள் எம்.வெங்கட சுப்பாராவ், மாண்புமிகு சர்.சி.வி. குமாரசாமி சாஸ்திரி, மாண்புமிகு எம். தேவதாஸ், திவான் பகதூர் நாராயணசாமி செட்டி, டபிள்யூ. ஆழ்வார் செட்டி, டி. விஜயராகவாச்சாரியார், வி. மாசிலாமணிப் பிள்ளை, ஜே.வெங்கட்டநாராயண நாயுடு, வேங்கடகிரி குமாரராஜா, சூனாம்பேடு ஜமீன்தார், வெங்கால் ஜமீன்தார், ராவ் பகதூர் தணிகாசலம் செட்டியார், டி.வரதராசலு நாயுடு, பி.மோப்புரப்பா, டாக்டர் நடேச முதலியார், ஆர்.என். ஆரோக்கியசாமி முதலியார், சி.வி. விசுவநாத சாஸ்திரி, எஸ்.சீனிவாச ஜயங்கார், எஸ்.சத்தியமூர்த்தி, டி.வி. சே­கிரி ஐயர், வித்யாசாகர் பந்தியா, பேராசிரியர் எம். இரத்தினசாமி, டி.பிரகாசம், ஏ.ரங்கசாமி ஐயங்கார், லெப்டினன்ட் கர்னல் திவான் கணபத்ரய் மற்றும் பலர்.
இறுதி ஊர்வலம் புறப்படும் போது அவர் மாளிகைக்கு வந்து குழுமிய மக்களிடையே தேவாங்கர் அசோ´யே­ன், தேர்டு டிவி­ன் ரேட் பிரேயர்ஸ் அசோ´யே­ன் மருத்துவக்குல அசோ´யே­ன், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், அகில இந்திய பிராமணரல்லாதார் காங்கிரஸ் கமிட்டி, மாகாண பிராமணரல்லாதார் காங்கிரஸ் கமிட்டி, ஜஸ்டிஸ் பத்திரிகைப் பணியாளர்கள், திராவிடன் பத்திரிகைப் பணியாளர்கள் ரோஜா மாலைகள் அணிவித்தனர். அருணாசலசாமி கோயில் டிரஸ்டிகள் முன்னதாக அன்று தீர்த்தம் அனுப்பி வைத்தனர்.
மாலை 6 மணிக்கு சில நிமிடங்கள் முன்னதாக மறைந்த தலைவரின் மாளிகையிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. அவ்வூர்வலம் சஞ்சீவிராயன் கோயில் தெரு, ஜந்திர பிள்ளையார் கோயில் தெரு, இராமனுஜ ஐயர் தெரு, சுப்பராயலு தெரு வழியாகச் சென்றது.
அந்த ஊர்வலத்தில் தேவாங்கர் குலத்தைச் சார்ந்த ஒரு குழுவினர், மக்கள் எழுப்பிய தியாகராயருக்கு ஜே என்று முழக்கங்களுக்கிடையே, தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடிச் சென்றனர். ஊர்வலம் ஒரு மைல் நீளத்தைத் தாண்டியது.
வீதியின் இரு மருங்கிலும் திரண்டிருந்த மக்கள் கண்ணீர்ப் பெருக்கி அஞ்சலி செலுத்தினர். அவருக்கு உரிய மயானத்தில் அவர் மூத்த சகோதரரும் முக்கியஸ்தர் களும் குழுமி இருந்த நிலையில் இரவு 8 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. மங்கலான நிலா வெளிச்சத்தில் பாடகர்களின் பாடல்களுடன் கூடிய இறுதி ஊர்வல இசையில், பல்லாயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கருங்கல் இதயத்தையும் கரையச் செய்யும் வகையில் அமைந்திருந்தது.
திVயகராயரின் திரு உடலைச் சுமந்தவர்கள் பனகல்அரசர், கே.பி. ரெட்டி, ஓ.தணிகாசலம் செட்டியார், டாக்டர் ச. நடேச முதலியார், மோப்பூரப்பா, டி. வரதராசலு நாயுடு, பி.பி. நடராஜ முதலியார், கே.ரங்கய்யா நாயுடு, டி. சுந்தராவ் நாயுடு மற்றும் டபுள்யூ எஸ்.கிருஷ்ணசாமி செட்டியார் ஆவர்.
மயானத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மாண்புமிகு பனகல் அரசர் சர்.கே.பி. ரெட்டி, மாண்புமிகு நீதிபதி எம்.தேவதாஸ். ஓ.தணிகாசலம் செட்டியார் டாக்டர் நடேச முதலியார் உரையாற்றினர்.-தி.வ.மெய்கண்டார். (இளந்தமிழன், ஏப்ரல் 2010)