Thursday, September 17, 2015

பெரியார் வரலாறு - நாரா. நாச்சியப்பன்

பெரியார் வரலாறு - நாரா. நாச்சியப்பன்
(மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் வாழ்க்கை வரலாறு போட்டியில் முதல் பரிசு ரூ 10,000 பெற்றது இந்நூல்.)
என் கண்மணிகளே! அன்புக் குழந்தைகளே! இப்போது உங்களுக்கு ஒரு வரலாறு சொல்லப் போகிறேன்.
இது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும், நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.
தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள்.
நமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது! என்றார். மதங்களை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்.
இதுவரை இந்த மாதிரி துணிச்சலாகப் போராடியவர்கள் யாரும் இல்லை. நமது பெரியார் இராமசாமி தான் இவ்வாறு புதுமையாகப் போராடினார்.
அவர் வாழ்ந்த காலம் முழுவதும் இந்த நோக்கங்களுக்காகவும் தமிழ் மக்களின் நல் வாழ்வுக்காகவும் அயராமல் போராடினார்.
அவருடைய வரலாறு ஒரு வீர வரலாறு. அவருடைய வரலாறு ஓர் அறிவு வரலாறு. அவருடைய வரலாறு ஓர் எழுச்சி வரலாறு.

இந்த வரலாற்றை நீங்கள் படித்தால் நம் தமிழ் மக்கள் எவ்வாறு முன்னேறினார்கள், எவ்வாறு உயர்வடைந்தார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். (தொடரும்)

பெரியாரின் பெற்றோர்...2

பெரியாரின் பெற்றோர்
பெரியார் இராமசாமி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். அவருடைய ஊர் ஈரோடு. அவருடைய தந்தையார் பெயர் வெங்கட்ட (நாயக்கர்). தாயார் சின்னத் தாயம்மாள். சின்னத் தாயம்மாளை அவருடைய பெற்றோர்கள் அன்பாக முத்தம்மா என்று அழைப்பார்கள்.
வெங்கட்ட (நாயக்கர்) ஏழைக் குடியில் பிறந்தார். அவர் இளம் வயதில் தந்தையை இழந்தார். தாயாரும் சிறிது காலம் சென்றதும் இறந்து போனார். அவருக்குப் பனிரெண்டு வயது நடக்கும் போதே கூலி வேலை செய்து பிழைத்தார். வெங்கட்ட (நாயக்கருக்கு) 18 வயது ஆகும் போது திருமணம் நடந்தது. சின்னத் தாயம்மாள் ஓரளவு வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவரும் குடும்பச் செலவுக்காக கூலி வேலைகள் செய்தார். இருவருக்கும் கிடைத்த மிகச் சிறிய வருவாயில் மிச்சம் பிடித்து வெங்கட்ட (நாயக்கர்) வண்டியும் மாடுகளும் வாங்கினார். பிறகு ஒரு சிறிய மளிகைக் கடை வைத்தார். அவருடைய ஓயாத உழைப்பினாலும், சின்னத் தாயம்மாள் உதவியாலும் மளிகைக் கடை சில ஆண்டுகளில் மண்டிக்கடை ஆயிற்று. மிகப் பெரிய செல்வர் ஆகிவிட்டார்.
ஒரு மரம் பழுத்துவிட்டால் காக்கைகளும், குருவிகளும், அணிலும், வெளவாலும் வந்து சேரும். அதுபோல வெங்கட்ட (நாயக்கர்) பணக்காரர் ஆனவுடன் பண்டிதர்களும், பாகவதர்களும், பக்தர்களும் அவரைத் தேடி வந்தார்கள்.
உழைப்பினால் வந்த பணத்தை கடவுள் அருளால் வந்ததென்று அவர்கள் கூறினார்கள். மேலும் கோயில் திருவிழா என்று தருமம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்றார்கள். வெங்கட (நாயக்கருக்கு) இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து போயின. தொடர்ந்து பத்து ஆண்டுகள் பிள்ளை பிறக்கவில்லை. இதனால் அவர்கள் பக்தியுடன் பிள்ளை வரம் கேட்டு விரதம் இருந்தனர்.
பத்து ஆண்டுகள் கழித்து முதல் பிள்ளையாக கிருஷ்ணசாமி பிறந்தார். அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து இராமசாமி பிறந்தார்.
இரண்டு பிள்ளைகளும் வெங்கடாசலபதி அருளால் கிடைத்த செல்வங்கள் என்று அவர்கள் நம்பினார்கள். வெங்கட்ட(நாயக்கர்) பக்தராக இருந்ததோடு நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் விளங்கினார். இதனால் அவர் ஈரோடு, கோயமுத்தூர் பகுதிகளில் பெயரும், புகழும் உடையவராக விளங்கினார். அவருடைய பிள்ளைகளும் மக்களால்நாயக்கர் மக்கள்என்று பெருமையாக அழைக்கஅழைக்கப்பட்டார்கள்.

                                                             
நாயக்கர்என்பது சாதிப் பெயர். ஆனால் அந்தப் பகுதிகளில் நாயக்கர் என்று சொன்னால் வெங்கட்ட (நாயக்கர்) ஒருவரையே குறிக்கும். அவ்வளவு புகழுக்குரியவராக அவர் விளங்கினார்.(தொடரும்)

செல்லப்பாட்டி...3

செல்லப்பாட்டி
வெங்கட்ட (நாயக்க)ருடைய சிற்றன்னை கணவனை இழந்தவர். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே, இராமசாமியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். சிறிய பாட்டியின் செல்வம் இராம சாமியை ஒரு முரடன் ஆக்கிவிட்டது. பாட்டி வசதியில்லாதவர். ஆகவே, இராமசாமிக்குப் பழஞ்சோறும், சுண்டற்குழம்பும் தான் உணவாகக் கிடைக்கும். இராமசாமிக்கோ வடை, வேர்க்கடலை, பட்டாணி போன்ற தீனிகளில் ஆசை அதிகம். பாட்டியிடம் காசு கிடைக்காது. ஆகையால், ஓசி வாங்கியும், தெருவில் சிந்திக் கிடப்பதைப் பொறுக்கித் தின்றும் தன் ஆசையைத் தணித்துக் கொள்வார்.
இராமசாமிக்கு ஆறுவயது ஆகும்போது திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கத் தொடங்கினார். பள்ளிக்குப் போகும் பொழுது தாழ்ந்த சாதிக்காரர்கள் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடிப்பது வழக்கம். இதைக் கேள்விப்பட்ட போது, அவருடைய தாயார் மிக வருந்தினார். பார்ப்பனர்களுக்கு அடுத்த பெரிய சாதியாக, தங்கள் சாதியை நினைத்துக் கொண்டிருந்த தாயாரால் இதைப் பொறுக்க முடியவில்லை. வேறு சாதியார் வீட்டிலோ சாயபுமார் வீட்டிலோ சாப்பிடக் கூடாது என்பதற்காக சில சமயங்களில் காலில் விலங்குக் கட்டை போட்டு விடுவார்கள். அந்தக் கட்டையையும் தோளில் சுமந்து கொண்டு மற்ற பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவார்.
சிறிய பாட்டியின் வளர்ப்பில் இராமசாமிஅடங்காப் பிடாரிஆகி விட்டார். அதனால் பாட்டியின் வளர்ப்பு சரியில்லை என்று தாய் தந்தையர் எண்ணினார்கள். அந்தப் பாட்டிக்கு இராமசாமியைத் தத்து எடுத்துக் கொள்ள ஆசையாய் இருந்தது. பாட்டி ஏழை என்பதாலும், கண்டித்து வளர்க்கவில்லை என்பதாலும், சின்னத் தாயம்மாள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
திண்ணைப் பள்ளிக் கூடத்தில் மூன்று ஆண்டுகள் படித்தார். பிறகு அவர் ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கு சென்றும், அவருடைய குணம் மாறவில்லை. குறும்பு செய்வதும், கூடப்படிக்கும் மாணவர்களை வம்புக்கு இழுப்பதும், அடிப்பதும் வழக்கமாகிவிட்டது. ஒரு நாள் தண்டிக்க வந்த ஆசிரியரையே அடித்துவிட்டார்.
ஒரு மாணவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி இருந்த இராமசாமியை பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்திவிட்டார்கள். பத்து வயதோடு அவருடைய படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதன்பிறகும் அவர் தன் குறும்புத் தனத்தை விடவில்லை. வீட்டிற்கு வந்து இராமாயணம், பாகவதம் படிக்கும் பண்டிதர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்பார்.
உலகத்தைப் பாயாகச் சுருட்டிய இராட்சதன் எங்கே நின்று கொண்டு சுருட்டினான் என்று கேட்பார். பாகவதர் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பார்.
எதிரில் நின்ற சண்டையட முடியாமல் மறைந்திருந்து வாலியின் மீது அம்பு விட்ட இராமன் வீரன்தானா? என்று கேட்பார். பண்டிதர்கள் மழுப்புவார்கள்.
இப்படி புராணங்களில் உள்ள நம்பத்தகாத செய்திகளையயல்லாம் அப்பட்டமான தனது பகுத்தறிவால் அந்தச் சின்ன வயதிலேயே தட்டிக் கேட்டார்.
ஒரு நாள் இராமநத அய்யர் என்பவரின் கடைக்குச் சென்றார். அவர் எல்லாம் தலைவிதிப்படித்தான் நடக்கும் என்று அடிக்கடி சொல்வார். அவர் கடையில் வெயிலுக்காக வைத்திருந்த தட்டியின் காலைக் கீழே தள்ளிவிட்டார். உடனே தட்டி கீழே சாய்ந்தது. அது இராமநாதய்யர் தலையில் விழுந்தது. ‘தலைவிதி உன் தலையில் தட்டியைத் தள்ளிவிட்டது. என்னை ஏன் அடிக்க வருகிறாய்?’ என்று சொல்லிக்கொண்டே ஓடிவிட்டார், இராமசாமி.
வெங்கட்ட (நாயக்கர்) உழைத்து முன்னேறியவர். அனுபவப் படிப்பால் உயர்ந்தவர். தன் மகன் படிப்பை நிறுத்திய அவர் கடையில் வேலைக்கு வைத்துக் கொண்டார். அதன்பிறகு இராமசாமி பொறுப்புள்ளவராக மாறினாலும், புராணங்களைக் கிண்டல் செய்வதும், பண்டிதர்களை மட்டம் தட்டுவதும் ஒரு பொழுது போக்காக வைத்துக் கொண்டார்.
இராமசாமிப் பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமி. அவர் மூத்த பிள்ளை. பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர். விரதங்கள், நோன்புகள் இருந்து, வெங்கடாலபதியை வேண்டிக் கொண்டபின் பிறந்தவர். எனவே பெற்றோருக்கு அவர்மீது ஆசை மிகுதி.
கிருஷ்ணசாமி மத பக்தியுள்ளவர். அடக்கமானவர். தாய் தந்தையர் சொன்னபடி நடப்பவர்.
அவர் தொடர்ந்து படித்துப் பெரிய புலவராக விளங்கினார். சித்த மருத்துவம் படித்து அதில் நல்ல தேர்ச்சி பெற்றார். பணக்காரருடைய பிள்ளையாக இருந்ததால், அவர் மக்களுக்கு ஊதியம் எதிர்பார்க்காமல் மருத்துவம் பார்த்தார்.
தம் தந்தையாரைப் போலவே புலவர்களை மதித்து நடந்தார். அவர்களை ஆதரித்து வந்தார்.
பக்தராகவும், புலவராகவும், சித்த மருத்துவராகவும் சிறந்த புகழ் பெற்றார் கிருஷ்ணசாமி.
பிற்காலத்தில் தம்பியின் கொள்கைகளே நாட்டுக்கு நன்மை செய்யும் என்று உணர்ந்தார். அவரும் பெரிய சீர்திருத்தக்காரராக மாறிவிட்டார்.

பழமையைப் போற்றுபவர்களும், கடவுள் கொள்கையுள்ளவர்களும் இராமசாமியை வெறுப்பது போல் கிருஷ்ணசாமியையும் வெறுக்கலாயினர்.